அரிய முழு சந்திர கிரகணம் துவங்கியது: நள்ளிரவு 1: 27 வரை நீடிக்கிறது
அரிய முழு சந்திர கிரகணம் துவங்கியது: நள்ளிரவு 1: 27 வரை நீடிக்கிறது
UPDATED : செப் 07, 2025 10:45 PM
ADDED : செப் 07, 2025 10:01 PM

சென்னை: அரிய முழு சந்திரகிரகணம் இன்று ( செப்.,07) இரவு 9:57 மணிக்கு துவங்கியது. நள்ளிரவு 1: 27 வரை நீடிக்கும் இதை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
சூரியன், நிலா மற்றும் பூமி இவை மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்வது தான் கிரகணங்கள். சூரியனை நிலவின் நிழல் மறைத்தால் அது சூரிய கிரகணமாகும். அதுவே, பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அதற்கு சந்திர கிரகணம் என்று பெயர்.
கடந்த மார்ச்சில் இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் காணப்பட்டது. அதன் பின்னர், முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) .இந்திய நேரப்படி இன்றிரவு இரவு 9.57 மணிக்கு துவங்கியது. திங்கள்கிழமை(செப்.8) நள்ளிரவு 1.27 மணி வரை நீடிக்கும். இது மிக நீண்ட சந்திர கிரகணமாகும்.
சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில், காணப்படும் முழு சந்திர கிரகணம் 11.42 மணி முதல் 12.33 மணி வரை நடக்கும். இதற்கு பிளட் மூன்(blood moon) என்று பெயர். உலகின் பல நாடுகளில் தெரியும் இந்த சந்திர கிரகணம், இந்தியாவில் குறிப்பாக, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் வெறும் கண்களில் தெளிவாக பார்க்கலாம். ஆனால் அதற்கு வானம் தெளிவாக இருக்க வேண்டும்.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் முழு சந்திர கிரகணத்தை காணலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை காண சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இனி அடுத்த சந்திர கிரகணம் 2028ம் ஆண்டு டிச.31ல் தான் நிகழும் என்று குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை முதலே மேகமூட்டம் காணப்படுகிறது இதனால் சந்திர கிரகணத்தை காண முடியாமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்திரகிரகணம் குறித்த நேரடி ஒளிபரப்பு தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.