ADDED : பிப் 08, 2024 09:26 AM

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை அருகே ஏற்றப்பட்ட ராமர் கொடி பற்றி சர்ச்சை எழுந்ததால் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ., சார்பில் திரிவேணி சங்கமத்தில் விவேகானந்தர் பாறை அருகே உள்ள ஒரு சிறிய பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு அதில் ராமர் உருவம் பொறித்த காவிக்கொடி ஏற்றப்பட்டது.
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவத் தொடங்கின. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கொடி அகற்றப்பட்டது. ராமர் கொடி அகற்றப்பட்ட நிலையில் அந்த கொடி கம்பத்தில் மீண்டும் காவி கொடி ஏற்றப்பட்டது. அதையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதை தொடர்ந்து மேலும் கொடியேற்றாமல் தடுக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

