நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி; வருவாய் துறை செயலர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி; வருவாய் துறை செயலர் ஆஜராக உத்தரவு
UPDATED : டிச 11, 2025 07:59 AM
ADDED : டிச 11, 2025 03:53 AM

சென்னை: 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் வருவாய் துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையில், நிலம் கையகப்படுத்துதல் சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்தவர் ஆர்.ரங்கராஜன். இவர் மீது, கடந்த 2014ல், கடலுார் குற்றப்பிரிவு போலீசார், ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரின் அடிப்படையில், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
குற்ற வழக்கு நிலுவையால், ஓய்வு பெற அனுமதி மறுத்ததுடன், ரங்கராஜனின் ஓய்வூதிய பலன்களை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
தன் ஓய்வூதிய பலன்களை விடுவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2019ல் ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'துறை ரீதியான அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க, அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால், ரங்கராஜனின் ஓய்வூதியப் பலன்களை 12 வாரங்களில் விடுவிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும், மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்கும்படியும், 2023ல் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, தமிழக அரசின் வருவாய் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், கடலுார் கலெக்டர் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, கடந்த ஆண்டு ரங்கராஜன் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'கடந்த 2023ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
'மறு ஆய்வு மனுவையும், கடந்த அக்., 9ல் இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனினும், இதுவரை உத்தரவை நிறைவேற்றவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், 'தமிழக அரசின் வருவாய் துறை செயலர் வி. ராஜாராமன், வரும் 17ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.
'உத்தரவை அதற்குள் நிறைவேற்றிவிட்டால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது' என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

