மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ஸ்தம்பித்தது கோடம்பாக்கம்
மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ஸ்தம்பித்தது கோடம்பாக்கம்
ADDED : பிப் 15, 2024 01:27 AM

கோடம்பாக்கம்:பார்வை மாற்றுத்திறனாளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோடம்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, நேற்று காலை 9:45 மணியளவில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள், பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனத் தேர்வில் இருந்து முழுமையாக விலக்களித்து, உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்.
ஊக்கத் தொகை 1,000த்தில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.
இதனால், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
ஆனால், தோல்வியில் முடிந்தது. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும், போக்குவரத்தை சீர்செய்யவும் வேண்டி, போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக துாக்கி, சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேல், அப்பகுதி பதற்றமாக காட்சியளித்தது.
'பீக் ஹவர்' வேளை என்பதால், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

