ADDED : ஜூலை 10, 2025 10:54 PM
கரூர்:உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி, கரூர் வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதியிடம், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர்விஜயகுமார் தலைமையில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கம் பிரச்னை தொடர்பாக, 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
கடந்த, 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணி காலமாக எடுத்துக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாமல், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மேல்முறையீடு செய்து காலம் கடத்தி வருகிறது.
எனவே, மேல் மூறையீட்டு மனுவை வாபஸ் பெற்று, நீதிமன்றம் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.