ADDED : ஜூன் 22, 2025 03:35 AM

உடுமலை : 'கள் உணவல்ல போதை பொருளே' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் தெரிவித்து அளித்த பேட்டி:
உலகத்திலும், இந்தியாவிலுள்ள எந்த மருத்துவ ஆய்வு நிறுவனங்களும் இவ்வாறு தெரிவிக்கவில்லை. கள் குறித்து அறிவியல் பூர்வமாக எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
நீரா, பதநீர் என குறிப்பிடுவதை கள் என அவர்கள் தவறாக புரிந்துள்ளனர். கள்ளும் ஒரு வித போதை தரும் மதுபானமே. கள்ளுக்கும், சாராயத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
டாஸ்மாக் மதுவில் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. கள், சாராயத்தில் போதைக்காக மாத்திரை உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்தால், உயிருக்கு ஆபத்தான பானமாக மாறும் அபாயம் உள்ளது.
அறியாமை காரணமாக, பலர் இதற்கு அடிமையாகும் நிலை உள்ளது. மதுவால் உடல் மட்டுமல்ல; ஏழைகளின் குடும்பமும் பாதிக்கும்.
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட கள்ளை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இறக்கி, மக்களுக்கு வழங்குகிறார். கள் இறக்கும் விவசாயிகள் சிறைக்கு செல்கின்றனர்.
ஆனால், மரம் ஏறி, கள் இறக்கிய சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
அரசியல் லாபத்திற்காக ஒரு சில கட்சியினர், இந்த மோசமான விஷயத்தை ஆதரிக்கின்றனர்.
கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கள் உணவுப்பொருள் என்ற ஆதாரமற்ற பிரசாரத்தை, அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், விவசாயிகளும் விட்டுவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.