'மணல் குவாரி உரிமம் தனியாருக்கு கூடாது' உயர் நீதிமன்றம் உத்தரவு
'மணல் குவாரி உரிமம் தனியாருக்கு கூடாது' உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 08, 2024 01:59 AM
மதுரை:'மணல் குவாரிகளை அரசு மட்டுமே நடத்த வேண்டும். தனிநபர்களுக்கு குவாரி உரிமம் வழங்கக்கூடாது' என உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உப்புக்கோட்டை சமாதானம் என்பவர், 2023ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருவாடானை அருகே சீர்கம்பையூர் பாம்பார் ஆற்றில் மணல் அள்ள ஒருவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. அனுமதித்த அளவை விட கூடுதல் இடம் மற்றும் அதிக ஆழத்தில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. சுற்றுச்சூழல், விவசாயம், நிலத்தடி நீர்மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளது. அந்த விதிகளை பின்பற்றுவதில்லை.
மாவட்டந்தோறும் உயர்நிலைக்குழு அமைத்து குவாரிகளை கண்காணிக்க வேண்டும். பாம்பார் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில், 'இந்த குவாரியில் மணல் அள்ள அனுமதித்த டெண்டர் உரிம கால வரம்பு முடிந்துவிட்டது' என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்: விதிகளின்படி மணல் குவாரியை அரசு மட்டுமே நடத்த வேண்டும். தனிநபர்களுக்கு குவாரி உரிமம் வழங்கக்கூடாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

