ADDED : டிச 15, 2024 02:03 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில், பா.ஜ., சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் சமத்துவ விருந்து நடந்தது. நடிகர் சரத்குமார் பங்கேற்று ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்ச்சியில், பா.ஜ.,வில் இணைந்த, 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
பின், நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது:
இ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். என்னோடு லோக்சபாவில் பயணித்தவர், சிறந்த நண்பர். நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கணிப்பு எனக்கு தெரியாது. தினமும் பல இடங்களில் கொலை, குற்றங்கள் நடந்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து ஜாமின் வழங்காமல் உடனடியாக தண்டனை வழங்கினால்தான், சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும்.
நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டர் செல்வதற்கு முன், போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தர முடியாது என்று கூறியிருக்கலாம். அப்படி செய்யாமல், அங்கு ரசிகை இறந்த சம்பவத்துக்கு அவரை பொறுப்பாக்கி கைது செய்தது ஏற்புடையதல்ல. இவ்வாறு கூறினார்.