'ஜெய்பீம்' பார்த்து கண்ணீர் விட்ட முதல்வர் பழங்குடி மக்களை மிரட்டுவதா: சீமான் கேள்வி
'ஜெய்பீம்' பார்த்து கண்ணீர் விட்ட முதல்வர் பழங்குடி மக்களை மிரட்டுவதா: சீமான் கேள்வி
ADDED : பிப் 21, 2025 06:38 AM

சென்னை : 'ஜெய்பீம் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட முதல்வர் ஸ்டாலின், பல்லடம் மூவர் கொலை வழக்கில், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி, பழங்குடியின மக்களை, போலீசார் மிரட்டியதற்கு என்ன சொல்லப் போகிறார்?' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், கடந்த ஆண்டு நவ., மாதம் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்தது.
இதில், மூன்று மாதங்களாக துப்பு துலங்காத காரணத்தால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி, பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களை, தமிழக போலீசார் மிரட்டுவது கண்டனத்துக்குரியது.
குற்றவாளிகளை பிடிக்க திறனற்றதாக, திணறிவரும் காவல் துறை, அப்பாவிகளை குற்றவாளியாக கட்டமைக்க முயல்வது வெட்கக்கேடானது.
ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய முதல்வர் ஸ்டாலின், அவரது ஆட்சியில், அவருக்கு கீழ் உள்ள காவல் துறை, பழங்குடி மக்கள் மீது, தொடர்ச்சியாக பொய்க் குற்றம் சுமத்தி பழிவாங்கும் கொடுமைகளுக்கு, என்ன பதில் சொல்லப் போகிறார்; இதுதான், இந்தியாவே திரும்பி பார்க்கும் தமிழக அரசின் சாதனையா?
பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறை, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு, அவதுாறு பரப்ப காட்டும் வேகத்தை, மக்களை காக்கவும், குற்றங்களை தடுக்கவும் காட்டினால், சட்டம் - ஒழுங்கு சீரடைந்திருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.