ADDED : ஏப் 15, 2025 06:24 PM
சென்னை:'ஹிந்தி மொழியில் வெளியாகி உள்ள, 'ஜாட்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்,' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஹிந்தி மொழியில் வெளியாகி உள்ள, 'ஜாட்' திரைப்படத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், தாயக விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்தும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வட மாநிலங்களில், அயோத்தி அருகே நடக்கும் கதை களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி 'யாழ்ப்பாண புலிப்படை' என்ற உள்நோக்கத்துடன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறானது. அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் என்பதுபோல் கட்டமைத்திருப்பதை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
முழுக்க முழுக்க, தமிழர்கள் மீதான இன வெறுப்பினாலேயே, இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்குவதுடன், தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, 'ஜாட்' படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

