யாரும் வாய் திறக்காததால் விரக்தி; ஹரித்துவார் சென்றார் செங்கோட்டையன்
யாரும் வாய் திறக்காததால் விரக்தி; ஹரித்துவார் சென்றார் செங்கோட்டையன்
ADDED : செப் 09, 2025 04:04 AM

அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரக்தி அடைந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 5ம் தேதி, கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது.
'எனவே, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை, 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி துவங்க வேண்டும்; இல்லையெனில், நானே இணைப்பு பணியில் ஈடுபடுவேன்' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், செங்கோட்டையன் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்துள்ளார். இது, அ.தி.மு.க.,வில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை கோவை வந்த செங்கோட்டையன், டில்லி கிளம்பிச் சென்றார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மனம் சரியில்லாததால், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறேன். பா.ஜ., தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை.
''கட்சியின் நன்மைக்காக, நியாயமான கோரிக்கையை தான் தலைமையை நோக்கி வைத்துள்ளீர்கள்; எனவே, கலங்க வேண்டாம் என தொண்டர்கள் சொல்கின்றனர். என் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.
செங்கோட்டையனின் ஹரித்துவார் பயணம் குறித்து, அவரது ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரிடம் பேசிய பின்தான், பழனிசாமிக்கு எதிராக பொதுவெளியில் பேசுவது என செங்கோட்டையன் முடிவெடுத்தார். அவர்கள் உடன் வருவர் என்ற தைரியத்தில் தான், பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார்.
ஆனால், அவரது கட்சி பதவிகளை பறித்த பிறகும், முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காதது, செங்கோட்டையனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான் மட்டும் பேசினால் எதுவும் நடக்காது; 10 முக்கிய நிர்வாகிகள் குரல் கொடுத்தால், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று தான் பேசியிருந்தார்.
ஆனால், இப்போது பழனிசாமியை எதிர்க்க துணிவின்றி, அவருக்கு எதிராக யாரும் வாய் திறக்கவில்லை. இதனால், செங்கோட்டையன் விரக்தி அடைந்துள்ளார். அதனால் தான் மன அமைதிக்காக ஹரித்துவார் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி அளித்த பண்ணாரி
பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பண்ணாரி, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர். கடந்த 5ம் தேதி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு கெடு விதித்து செங்கோட்டையன் பேட்டி கொடுத்தபோது உடனிருந்தார். ஆனால், நேற்று செங்கோட்டையன் டில்லி புறப்பட்டதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் செல்வராஜை சந்தித்து, பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இது, செங்கோட்டையன் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், பவானிசாகர் தொகுதியில், 'சீட்' உறுதி என வாக்குறுதி அளிக்கப்பட்டதால், பழனிசாமி பக்கம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
-- நமது நிருபர் -