ADDED : மார் 15, 2024 01:38 AM
சென்னை:திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் சந்திரா; சட்டவிரோத மணல் குவாரி, நில அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுப்பவர். திருவண்ணாமலை - செங்கம் சாலையில், சிங்கமுக தீர்த்தம் சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் வரும் போது, படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக, கவுன்சிலராக இருந்த திருப்பதி பாலாஜி, அவரது தந்தை, சகோதரர், அவரது மனைவி மற்றும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 2012 ஜூலையில் சம்பவம் நடந்தது. கொலை வழக்கை, திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி விசாரித்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இருவர் இறந்து விட்டனர். திருப்பதி பாலாஜி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்த ஆண்டு ஜனவரியில், திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, ஏழு பேரும் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் தொடர்பாக, அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்ததாக, கொலை செய்யப்பட்டவரின் மனைவி அளித்த சாட்சியம், நம்பும்படியாக இல்லை. ஏனென்றால், சம்பவம் குறித்து உடனடியாக போலீசில் அவர் தெரிவிக்கவில்லை. தாமதமாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

