பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல்நிலை பாதிப்பால் மீண்டும் 'அட்மிட்'
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல்நிலை பாதிப்பால் மீண்டும் 'அட்மிட்'
ADDED : ஜூலை 24, 2025 12:53 AM
திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த, 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து, தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்த சம்பவம், தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி, சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், ஒரு வாரம் சிகிச்சை பெற்று, கடந்த, 19ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட தனி அறையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயகுமார் கூறியதாவது:
சிறுமியின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு இருப்பதாக, அவரது தாயார் தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறுமி பாதித்திருப்பதால், அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.