ADDED : டிச 12, 2025 01:26 AM

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளி கிராம் நேற்று, 209 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச அளவில் மின் வாகனம், சூரியசக்தி மின் சாதனம், விண்வெளி ஆகிய துறைகளில், வெள்ளி பயன்பாடு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கத்தை போல், வெள்ளியிலும் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,030 ரூபாய்க்கும், சவரன், 96,240 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, வெள்ளி விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 96,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 209 ரூபாயாக உயர்ந்துள்ளது.

