ADDED : ஜன 26, 2025 05:42 AM
விழுப்புரம் : திண்டிவனம் நகரில் நாளை முதல்வர் ஸ்டாலின், வேனில் சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்திக்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். நாளை மாலை சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு காரில் வருகை தரும் முதல்வருக்கு, மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் மேம்பாலம் வழியாக தனியார் திருமண மண்டபம் வரை வேனில் சென்று, பொதுமக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் விழுப்புரம் வருகை தரும் முதல்வர், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு, விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் ரூ.5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளின் மணி மண்டபம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
அதே வளாகத்தில், பல்வேறு துறைகள் சார்பில், பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் பொன்முடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. கட்சி மற்றும் அரசு விழாக்களுக்கும் 'ரோடு ஷோவிற்கும் ஒன்றியத்திற்கு 2,000 பேரை திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை விழுப்புரம் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர்கள் கவுதமசிகாமணி (தெற்கு) சேகர் (வடக்கு) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

