ADDED : மார் 08, 2024 12:00 PM
சென்னை:அவமதிப்பு வழக்கில், அம்பத்துாரில் தாசில்தாராக பணியாற்றிய, 17 அதிகாரிகளுக்கு விதித்த ஒரு மாத சிறை தண்டனையை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை அம்பத்துாரில் உள்ள நிலத்துக்கு பட்டா கோரி, மோலி அலெக்சாண்டர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பட்டா வழங்க, அம்பத்துார் தாசில்தாருக்கு, 2010ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 2010 முதல் அம்பத்துாரில் தாசில்தாராக பணியாற்றிய அதிகாரிகள், 17 பேர் ஆஜராக, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.
வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்த போது, அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. அதனால், 17 அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரினார்.
இதையடுத்து, 17 அதிகாரிகளுக்கும் விதித்த சிறை தண்டனையை அமல்படுத்த தடை விதித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

