ADDED : மார் 06, 2024 11:28 PM

சென்னை- 'வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக்கோரும் விஷயத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி, கடந்த மாதம் 28ம் தேதி முதல், வழக்கறிஞர் பகவத்சிங் தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தொடர் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
இதுகுறித்து, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே.பாலு ஆஜராகி முறையிட்டார்.
வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களில் இருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.
இதையடுத்து, 'பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். சட்டரீதியாக தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது. இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லும்படி, அரசு பிளீடர் எட்வின் பிரபாகரிடம் அறிவுறுத்தியது.

