ADDED : ஜன 26, 2025 01:10 AM
சென்னை: குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் இன்று கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்.
கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல், அவருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக சட்டசபையில் உரையாற்றாமல், கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார்.
எனவே, கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக, தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
கடந்த ஆண்டு கூட்டணி கட்சிகள் புறக்கணித்தாலும், அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின், தேனீர் விருந்தில் பங்கேற்றார். தி.மு.க., புறக்கணித்தாலும், அரசின் சார்பில் முதல்வர் பங்கேற்றதாக கூறப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு கவர்னரின் தேநீர் விருந்தை, தமிழக அரசும் புறக்கணிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேநீர் விருந்தில் பங்கேற்க, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோருக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்து உள்ளது. அவர்களும் புறக்கணிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.