ஓய்வூதியம் உயர்த்தாமல் வஞ்சிக்கும் தமிழக அரசு; சத்துணவு ஊழியர் சங்கம் வேதனை
ஓய்வூதியம் உயர்த்தாமல் வஞ்சிக்கும் தமிழக அரசு; சத்துணவு ஊழியர் சங்கம் வேதனை
ADDED : அக் 22, 2025 06:25 AM

உடுமலை: 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, நீண்ட காலமாக ஓய்வூதியத்தை உயர்த்தவில்லை; கோர்ட் உத்தரவை கூட அமல்படுத்தாமல் அரசு அலட்சியம் காட்டுகிறது, என சத்துணவு ஊழியர் சங்கத்தி னர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு மாதம், 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், முன்னாள் மாநிலச்செயலர் கருணாநிதி கூறியதாவது:
ஓய்வு பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கு 700; சமையலர்களுக்கு 600; உதவியாளர்களுக்கு 500 ரூபாய் சிறப்பு ஊதியமாக, தி.மு.க., அரசு கடந்த 2008ல் அறிவித்தது.
அடுத்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 1,000 ரூபாயாக அத்தொகை உயர்த்தப்பட்டது. தற்போது, மாதத்துக்கு, 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக வருவாய் கிராம ஊழியருக்கு, 6,750 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத்தை வழங்கினால், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும்.
கடந்த 2008ல், அரசு அறிவித்த சிறப்பு ஓய்வூதியத்தை செயல்படுத்தியிருந்தால், அமைப்பாளருக்கு, 4,431 ரூபாய்; சமையலருக்கு, 4,279 ரூபாய், உதவியாளருக்கு, 4,125 ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், இந்த தொகையையும் வழங்காமல் அரசு எங்களை வஞ்சித்து விட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு உதவித்தொகைகள் அரசால் உயர்த்தப்பட்டுள்ளன; எம்.எல்.ஏ.,க்களுக்கு கூட ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படாதது கவலை அளிக்கிறது.
இவ்வாறு தெரிவித்தார்.