ADDED : நவ 29, 2024 01:38 AM
சென்னை:சட்டவிரோத மணல் விற்பனை விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், பொதுத்துறை செயலர் இன்று ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், புகார் எழுந்தது.
இதுகுறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது; பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியது.
இதை எதிர்த்து, பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலுார் மற்றும் வேலுார் கலெக்டர்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.
விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வழக்கை திருப்பி அனுப்பியது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர்; தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு தொடர்ந்திருந்த தமிழக அரசின் பொதுத்துறை செயலர் இன்று நேரில் ஆஜராகி, இந்த வழக்கில் அரசு தரப்பில் யார் ஆஜராகிறார் என தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்; விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.