ADDED : மார் 01, 2024 10:11 PM
சென்னை:போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் எங்கெங்கு காணினும், போதை வஸ்துகளால் நிரம்பியிருக்கிற, இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ 'மெத்தம்பெட்டபைன்' போதைப் பொருள், நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து, அனைத்து போதைப் பொருட்களும், சர்வ சாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழகத்தை, தி.மு.க., அரசு மாற்றியிருப்பது வேதனைக்குரியது.
தமிழகத்தின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும், இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு, முதல் குடும்பத்துடன் நெருக்கமும், அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த, முதல்வருக்கு என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

