தமிழக அமைச்சர்களே பிரதமரை போய் பாருங்கள் யோசனை சொல்லும் அன்புமணி
தமிழக அமைச்சர்களே பிரதமரை போய் பாருங்கள் யோசனை சொல்லும் அன்புமணி
ADDED : ஜூலை 25, 2025 02:16 AM
சென்னை: 'பிரதமர் மோடியை, தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்து, சோழகங்கம் ஏரியை சீரமைக்க மத்திய அரசு நிதியை பெற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழகங்கம் ஏரியை சீரமைக்க, 12 கோடி ரூபாய் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சோழகங்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க, 663 கோடி ரூபாய் செலவாகும் என, தமிழக அரசின் நீர்வளத் துறை மதிப்பிட்டுள்ளது. ஆனால், 12 கோடி ரூபாயை மட்டுமே அரசு ஒதுக்கி உள்ளது.
இது, ராஜேந்திர சோழனுக்கு அவமதிப்பையே ஏற்படுத்தும். சோழகங்கம் ஏரியை 12 கோடியில் சீரமைக்க முடியாது என தெரிந்தும், தமிழக மக்களை எளிதாக ஏமாற்றி விடலாம் என நினைத்து, பெயரளவில் தி.மு.க., அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில், எந்தவொரு பாசனத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதற்காக, தி.மு.க., அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்.
நாளை மறுதினம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வரும் பிரதமர் மோடியை, தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்து, சோழர் பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.