ADDED : நவ 27, 2025 02:12 AM

சென்னை: பாரத சாரண -- சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான 'வெள்ளி யானை' விருது, தமிழகத் துக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரத சாரண - சாரணியர் இயக்கமான, 'ஸ்கவுட்ஸ்' வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிப்போருக்கு, வெள்ளி யானை விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசு கடந்த ஜன., 28 முதல் பிப்., 3 வரை, பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை, 39 கோடி ரூபாய் செலவில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிறப்பாக நடத்தியது.
இதற்காக, நேற்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பாரத சாரண - சாரணியர் விழாவில், கவர்னர் ஆனந்திபென் படேல், தமிழக சாரண - சாரணியர் இயக்கத் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷுக்கு வழங்கினார்.
இது குறித்து அமைச்சர் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில், 'நாடே வியக்கும்படி, பாரத சாரண - சாரணியர் விழாவை நடத்திக் காட்டிய சாரணர்களின் உழைப்புக்கு, இவ்விருதை அர்ப்பணிக்கிறேன். இந்த விருது தந்துள்ள உற்சாகத்தோடு, நம் மாணவ - மாணவியரின் நலனுக்காக, மேலும் சிறப்பாக உழைக்க ஊக்கம் பெறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

