பள்ளி திறப்பு, வெயிலால் எகிறும் தமிழக மின் நுகர்வு
பள்ளி திறப்பு, வெயிலால் எகிறும் தமிழக மின் நுகர்வு
ADDED : ஜூன் 04, 2025 10:36 PM

சென்னை:தமிழகம் முழுதும் வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும், 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள தமிழக மின் நுகர்வு, சுட்டெரிக்கும் வெயிலால், கோடை காலத்தில் அதிகரிக்கிறது.
அதன்படி, 2024 ஏப்., 30ல், 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. இந்தாண்டு கோடை காலத்தில் மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஏப்., இறுதியில் இருந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், இந்தாண்டு கோடையில் மின் நுகர்வு உச்சத்தை எட்டவில்லை. கடந்த மாதத்தில் மின் நுகர்வு தினமும் சராசரியாக, 35 கோடி யூனிட்களாக இருந்தது.
தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சில தினங்களாக வெயிலும் கடுமையாக உள்ளது. இதனால், 'ஏசி' சாதனம் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. எனவே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின் நுகர்வு, 6 கோடி யூனிட்கள் உயர்ந்து, நேற்று முன்தினம், 41 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.

