ADDED : ஏப் 23, 2025 12:40 AM
சென்னை:சட்டசபையில், எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்தபதிலுரை:
கடந்த நான்கு ஆண்டுகளில், 27.76 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3.67 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில், 1.82 லட்சம் விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த, 2021 ஏப்ரலில், 32,595 மெகா வாட்டாக இருந்த தமிழகத்தின் மொத்த மின் நிறுவு திறன், தற்போது, 39,770 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள், 91 சதவீதம் முடிவடைந்துள்ளன. முதல் அலகில் இந்தாண்டு ஜூலையிலும், இரண்டாவது அலகில், அக்டோபரிலும் உற்பத்தி துவங்கும்.
தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய, எண்ணுார் சிறப்பு அனல் மின் நிலைய திட்ட பணிகள், 62 சதவீதம் முடிவடைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மின் கட்டண மானியமாக, 51,694 கோடி ரூபாயை, அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

