ADDED : ஆக 05, 2025 02:26 AM

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் 14 நாடுகளில் வசிக்கும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்
தமிழக அரசின், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், தமிழர்களின் பண்பாடு, கோவில்களின் வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஆண்டிற்கு இரு முறை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பஸ் மூலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
அந்த வகையில் பிரான்ஸ், ஜெர்மன், மலேசியா, கனடா, மியான்மர், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும், அயலக தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த அவர்கள், கோவிலின் கட்டடக் கலை, சிற்பங்கள், நடராஜர் சன்னதியின் பொற்கூரை, 4 கோபுரங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
சிவகாமசுந்தரி சமேத நடராஜர், கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து, கோவில் வரலாறு குறித்து அறிந்து கொண்டனர்.
மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கண்காணிப்பாளர்கள் கனிமொழி, தனலட்சுமி ஆகியோர் அவர்களை வழி நடத்தினர்.
தொடர்ந்து, கும்பகோணம் அருகே நாதஸ்வரம் தயார் செய்யும் இடத்தை பார்வையிட புறப்பட்டு சென்றனர். கடந்த 1ம் தேதி துவங்கிய பயணம் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.