'பார்'களில் திடீர் சோதனை நடத்த 'டாஸ்மாக்' நிர்வாகத்திற்கு உத்தரவு
'பார்'களில் திடீர் சோதனை நடத்த 'டாஸ்மாக்' நிர்வாகத்திற்கு உத்தரவு
ADDED : டிச 04, 2025 05:45 AM

சென்னை: 'மதுபான கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களில், சட்டவிரோத மது விற்பனை நடக்கிறதா என, திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்' என, 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
சென்னை, ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டிய மதுபானக் கூடத்தில், சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும், இரவு 10:00 மணிக்கு மேல் மது பானங்கள் விற்கப்படுகின்றன.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, 'பார்' உரிமம் பெற்றவர், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்று வருகிறார். என் புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறதா என, டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்' எனு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

