பட்டப்பகலில் ஆசிரியை குத்திக்கொலை; வக்கீலுக்கு அரிவாள் வெட்டு
பட்டப்பகலில் ஆசிரியை குத்திக்கொலை; வக்கீலுக்கு அரிவாள் வெட்டு
UPDATED : நவ 21, 2024 12:10 AM
ADDED : நவ 20, 2024 11:45 PM

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இரண்டு நகரங்களில் கொலைவெறி தாக்குதல் நடந்தது. பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். வக்கீல் ஒருவர் கோர்ட் வாசலில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த ரமணி, 25, ஜூன் மாதம் இப்பள்ளியில் தமிழ் ஆசிரியை வேலையில் சேர்ந்தார். நேற்று காலையில் பள்ளிக்கு வந்த ஒரு வாலிபர், ஆசிரியர்கள் அறை வாசலில், ரமணியை சந்தித்து பேசினார்.
பேச்சு வாக்குவாதமாக மாறிய நிலையில், திடீரென அவர் கத்தியை எடுத்து, ரமணியின் கழுத்திலும், வயிற்றிலும் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், வாலிபரை மடக்கி பிடித்தனர்.
ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமணியின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரமணியை கொன்ற வாலிபரின் பெயர் மதன் குமார், 28; சின்னமனைதான் சொந்த ஊர்; 10ம் வகுப்பு படித்தவர்.
நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். தங்கை திருமணத்திற்காக ஊருக்கு வந்தவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
ரமணியும், மதன்குமாரும் ஒரு ஆண்டிற்கு மேல் காதலித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், மதனின் பெற்றோர், ரமணி வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர்; அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
திடீரென ரமணியின் பெற்றோர் மனம் மாறினர். மதன் நடத்தை சரியில்லாதவர் என யாரோ கூறியதால் வந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. பெற்றோர் பேச்சை ரமணி தட்டவில்லை; மதனுடன் பேசுவதை நிறுத்தினார்.
மதன், நேற்று முன்தினம் மாலையில், திருமணம் குறித்து ரமணியிடம் பேசியுள்ளார். ரமணி அவரை திட்டிவிட்டு போய்விட்டாராம். அந்த ஆத்திரத்தில் தான் கத்தியுடன் பள்ளிக்கு வந்து, ரமணியுடன் பேசிப் பார்த்தும் பலன் இல்லாததால், கத்தியால் குத்தியிருக்கிறார்.
பள்ளியில் இருந்து 150 மீட்டரில், கலெக்டர் வருகைக்காக நின்று கொண்டு இருந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வந்து, மதனை பிடித்து சென்றனர். பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல ஊர்களில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓசூர் சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் கண்ணன், 30; வக்கீல். மூத்த வக்கீல் சத்தியநாராயணாவின் ஜூனியராக இருக்கிறார். இவர் நேற்று மதியம் கோர்ட் வேலை முடிந்து அலுவலகம் திரும்பி கொண்டிருந்தார்.
கோர்ட் வாசலுக்கு வந்தபோது, பின்னால் வந்த வாலிபர், அரிவாளால் கண்ணனை வெட்டினார். கீழே விழுந்தவரை தலை, கழுத்து, தொடை என பார்த்துப் பார்த்து வெட்டினார். கண்ணன் ரத்த வெள்ளத்தில் துடித்தபோது, வாலிபர் நிதானமாக பார்வையிட்டு, மீண்டும் கழுத்திலும், முகத்திலும் வெட்டினார். சுற்றிலும் நுாறு பேருக்கு மேல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்ததை, அவர் கண்டுகொள்ளவில்லை.
கண்ணன் அசைவற்று கிடந்ததை பார்த்து, உயிர் போயிருக்கும் என்ற எண்ணத்துடன் கோர்ட் வளாகத்துக்குள் நடந்து சென்று, அங்கிருந்த போலீசிடம் சரண் அடைந்தார். கண்ணனை போலீசார் துாக்கிச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்; அவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வக்கீலை வெட்டியவர் பெயர் ஆனந்தகுமார், 39. வக்கீல் குமாஸ்தாவாக வேலை செய்கிறார். மனைவி வக்கீல். அவரும் கண்ணனும் பேசி, பழகியது ஆனந்தகுமாருக்கு பிடிக்கவில்லை; கண்டித்தும் கண்ணன் கேட்கவில்லை. சமீபத்தில் ஆனந்தகுமார் அடித்ததில், கண்ணன் சில பற்களை இழந்தார். ஆனாலும், பழக்கத்தை விடவில்லை. அந்த கோபத்தில் தான், நேற்று கண்ணனை வெட்டி சாய்த்திருக்கிறார்.
'டாக்டர்களுக்கு இருப்பதை போல, வக்கீல்களுக்கும் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்; கைத்துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல ஊர்களில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரே நாளில், அதுவும் பட்டப்பகலில், இரண்டு கொலைவெறி சம்பவங்கள் நடந்திருப்பதை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு கொலைகளும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்துள்ளன. 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை' என அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரூ.25 லட்சம் தர வேண்டும்
பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு, தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட, அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். செந்தில்குமார்,மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.