ADDED : ஜூலை 18, 2026 06:26 AM

சென்னை: 'நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, மறு தேர்வு இல்லாமல், பணி நியமன ஆணை வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கடந்த, 2024ல் நடைபெற்ற நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே
நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது, 'நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மறு தேர்வு இல்லாமல், அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஊக்கத்தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்றோர், கண்களில் சிவப்பு நிற கொடியை கட்டிக்கொண்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழக அரசு, தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
