ஆசிரியர்கள் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ஆசிரியர்கள் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜன 31, 2026 07:00 AM

சென்னை: 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 36வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட, இடைநிலை ஆசிரியர்கள், காந்தியின் 75வது நினைவு நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
தமிழகத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையின் பல்வேறு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 36வது நாளாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் அருகே, 800க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்திற்கு இடையே, காந்தியின், 75வது நினைவு நாளையொட்டி, இடைநிலை ஆசிரியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, பஸ்களில் ஏற்ற முயன்றனர்.
பஸ் நிரம்பிய பின்னரும், ஆசிரியர்களை அதில் ஏறும்படி போலீசார் வற்புறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக ஏற்ற முயல, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆனால், விடாப்பிடியாக போலீசார் அவர்களை பஸ்களில் ஏற்றி, திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலை விடுவித்தனர்.

