சட்டசபை கூட்டம் துவங்கியது 12 நிமிடங்களில் ஒத்திவைப்பு
சட்டசபை கூட்டம் துவங்கியது 12 நிமிடங்களில் ஒத்திவைப்பு
ADDED : அக் 15, 2025 12:48 AM
சென்னை:மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின், சட்டசபை கூட்டம், 12 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். அதன்படி, ஏப்ரல் மாதத்திற்கு பின், நேற்று காலை, 9:30 மணிக்கு சபை கூடியது.
திருக்குறள் மற்றும் தெளிவுரை வாசித்து, கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.
இரங்கல் தீர்மானம் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர் மறைவு குறித்து, இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பலியான 41 பேர், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூ., முன்னாள் பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலா வெங்கடேசன், வால்பாறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சபையை நாளை காலை, 9:30 மணிக்கு, சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். மொத்தம், 12 நிமிடங்களில் சபை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
முதல் முறை சட்டசபை நிகழ்வுகள், அங்குள்ள எல்.இ.டி., 'டிவி'க்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதை பார்த்து முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள் எவ்வளவு நேரம் பேசுகின்றனர்; அவர்களின் தொகுதி, கட்சி உள்ளிட்ட விபரங்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்று இரங்கல் குறிப்புகள் மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்ட போது, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்களின் சுய விபரங்கள், அரசியல் பின்னணி குறித்து, சில வினாடிகள் திரையில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.