கச்சத்தீவு செல்ல நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடை விதிப்பு தடையை மீறுவோம் என ஆவேசம்
கச்சத்தீவு செல்ல நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடை விதிப்பு தடையை மீறுவோம் என ஆவேசம்
ADDED : பிப் 23, 2024 02:47 AM
ராமேஸ்வரம்: பாதுகாப்பு காரணங்களால் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல நாட்டுப்படகு மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோட்டாட்சியர் தடை விதித்தார். இதையடுத்து தடையை மீறி கச்சதீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகில் செல்வோம் என பாரம்பரிய மீனவர் சங்கத்தினர் ஆவேசமாக தெரிவித்தனர்.
இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கப்பதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று கச்சத்தீவு பயணக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் வேர்கோடு சர்ச் பாதிரியார் சந்தியாகு மீனவர் போராட்டத்தால் இந்தாண்டு கச்சத்தீவு பயணம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று முன் தினம் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் கச்சதீவு விழாவுக்கு 17 நாட்டுப்படகுகளில் 302 பேர் செல்வதற்கு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களைக்கூறி நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் செல்ல அனுமதி மறுத்து ராமநாதபுரம் கோட்டாட்சியர் கோபு உத்தரவிட்டார். இதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியதாவது: ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது.
பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழாவுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் சம்மதிக்கவில்லை. தடையை மீறி 5 நாட்டுப்படகில் மீனவர்கள் கச்சதீவு விழாவுக்கு செல்வோம் என்றார்.