அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்... இ.பி.எஸ்., தான்!:அமித் ஷா வருகைக்கு பின் தமிழக பா.ஜ., முடிவில் மாற்றம்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்... இ.பி.எஸ்., தான்!:அமித் ஷா வருகைக்கு பின் தமிழக பா.ஜ., முடிவில் மாற்றம்
UPDATED : ஆக 25, 2025 12:21 AM
ADDED : ஆக 25, 2025 12:12 AM

''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்; கூட்டணி ஆட்சி குறித்தும் அவரே முடிவெடுப்பார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் நேற்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், சமீபத்திய தமிழக பயணத்தை அடுத்து, பா.ஜ., முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே மீண்டும் கூட்டணி அமைய முயற்சி எடுக்கப்பட்டது.
இதன் பலனாக, கடந்த ஏப்ரலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தது. அப்போது, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும்' என, அமித் ஷா கூறினார்.
கடும் கோபம்
இதனால், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும்' என, அமித்ஷாவே சொல்லி விட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர்களும், நிர்வாகிகளும் கூறி வந்தனர். கூடவே, சட்டசபை தேர்தலுக்கு பின், 'முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம்' என்றும் தெரிவித்தனர்.
இது, அ.தி.மு.க., தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 'என்ன தான் பா.ஜ.,வுடன் கூட்டணியாக இருந்தாலும், அ.தி.மு.க., தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும்; பழனிசாமியே அடுத்த முதல்வர்' என, அக்கட்சியினர் ஓங்கிச் சொல்லத் துவங்கினர். இதனால், இரு கட்சிகளும் இவ்விஷயத்தில் முரண்பட்டு நின்றன.
இந்நிலையில், 'தமிழகத்தை மீட்போம்; மக்களை காப்போம்' என்ற பெயரில், கடந்த சில நாட்களாக பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது.
'அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்' என்று கூறியதுடன், தன்னையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, தொடர்ச்சியாக பேட்டி அளித்தார்.
அதேநேரத்தில், இரு கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தொடரக்கூடாது என்று முடிவெடுத்த தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், பிரசாரத்துக்காக திருநெல்வேலிக்கு பழனிசாமி வந்த போது, தன் வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார். அதன்பின், இரு கட்சியினருக்கும் இடையே நீடித்து வந்த நெருடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கின.
மாநாடு
கடந்த 22ம் தேதி, திருநெல்வேலியில், தமிழக பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தமிழக தலைவர்
களிடம் பேசியுள்ளார்.
அப்போது, 'தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் தான், தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
'எனவே, அக்கட்சி சார்பில் தான், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக இருப்பார். இதையே, பா.ஜ.,வினரும், மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்' என்று உறுதிபட சொல்லி இருக்கிறார்.
இதையடுத்தே, அமித் ஷாவின் கருத்துகளை, தமிழக பா.ஜ., தலைவர்கள் சொல்லதுவங்கி உள்ளனர். முதற்கட்டமாக கட்சியின் முன்னாள் தலைவர்அண்ணாமலை, இது குறித்து பேசினார்.
நீண்ட நாட்களாக, பழனிசாமியுடன் முரண்பட்டு நின்ற அண்ணாமலை, 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். அவர் தலைமையில், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, பா.ஜ.,வினர் அனைவரும்பாடுபடுவோம்' என்று கூறினார்.
அவரை தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனும், அதே கருத்தை கூறத் துவங்கி உள்ளார். திருச்சியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் பழனிசாமி; தேர்தல் முடிந்த பின், ஆட்சி அமைப்பது குறித்து அவர் தான் முடிவெடுப்பார். கூட்டணி ஆட்சி குறித்தும், அவர் தான்
முடிவெடுப்பார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., தான் பெரிய கட்சி. அதனால், அக்கட்சியின் பொதுச்செயலர் தான், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். இதில், யாருக்கும் மன வருத்தமோ; மாற்றுக்கருத்தோ இல்லை. யாரும் இதில் குழப்பம் விளைவிக்க முடியாது.
கட்சிகள் வரும்
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சியினரும், எவ்வித தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர்.தேர்தல் நெருக்கத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வரக்கூடும். வேறு பல கட்சிகளும் வந்து, அசைக்க முடியாத அளவுக்குகூட்டணி பலம் பெறும்.
இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.
- நமது நிருபர் -