ADDED : செப் 29, 2025 01:42 AM
திண்டிவனம்: 'தி.மு.க., ஆட்சியில் கற்றல் திறன் குறைந்துள்ளது' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர், அளித்த பேட்டி:
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் கல்வித்துறை முற்றிலும் சீரழிந்துள்ளது. தமிழகத்தில், 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், கல்வியில் சிறந்து விளங்குவதாக, முதல்வர் ஸ்டாலின் தனக்கு தானே பாராட்டு விழா நடத்திக் கொள்கிறார்.
பள்ளிகளில் போதிய கட்டடம் இல்லை, மரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. கேட்டால், மத்திய அரசு, கல்வி நிதியை கொடுக்கவில்லை என பஞ்சப்பாட்டு பாடுகின்றனர். ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், கல்வி மேம்பாட்டுக்காக மாநில அரசு, தன் சொந்த நிதியையே கொடுக்கலாம்.
'உங்களுடன் ஸ்டாலின்', 'நலன் காக்கும் ஸ்டாலின்', 'இளையராஜாவிற்கு பாராட்டு விழா' என நடத்துவதற்கெல்லாம் நிதி இருக்கும்போதும், கல்வித்துறைக்கு செலவழிக்க பணம் இல்லையா? தன் அப்பாவிற்கு நுாறு கோடி ரூபாய் செலவில் பேனா வைக்க முயலும் ஸ்டாலினுக்கு, மாணவர்களுக்கான கல்விக்கு செலவிட மட்டும் மனம் இல்லை.
தமிழக மாணவர்களின், கற்றல் திறன் முற்றிலும் குறைந்துள்ளது. தமிழகத்தில், 12க்கும் மேற்பட்ட பல்கலைகளில் துணைவேந்தர் இல்லை.
மேலும், 18 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 900 தலைமையாசிரியர்கள், 9,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தத்தில், கல்வித்துறை துாங்கி வழிந்து, நாசமாகிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு சண்முகம் கூறினார்.