பூர்ணசந்திரன் இறப்பிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் *நயினார் நாகேந்திரன் ஆவேசம்
பூர்ணசந்திரன் இறப்பிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் *நயினார் நாகேந்திரன் ஆவேசம்
ADDED : டிச 20, 2025 06:41 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றாததால், மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்ததற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்'' என, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றாததால், அதிருப்தியடைந்த பக்தர் பூர்ணசந்திரன், மதுரையில் நேற்று முன்தினம் தீக்குளித்து இறந்தார். அவர் வெளியிட்டிருந்த ஆடியோவில், 'தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவன் என்றாலும் நான் ஹிந்து' என்று குறிப்பிட்டிருந்தார். பூர்ணசந்திரன் உடலுக்கு நேற்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலர் ராம சீனிவாசன், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., -ஹிந்து முன்னணி சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பூர்ணசந்திரன் மனைவி இந்துமதியிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
பா.ஜ., ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி தொண்டர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி, பூர்ணசந்திரன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
பூர்ணசந்திரன் மறைவுக்கு தி.மு.க., அரசே பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தாலே 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது தமிழக அரசு. பூர்ணசந்திரனின் மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயும் வழங்க வேண்டும். தமிழக அரசு இதில் அரசியல் செய்யக் கூடாது. தமிழகம் முழுதும் பூர்ணசந்திரனுக்காக மோட்சதீபம் ஏற்ற வேண்டும்.
இறந்த பூர்ணசந்திரன், தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால், இங்கு அரசியல் பேசத் தேவையில்லை. இதிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது, அரசியல் சார்ந்தது அல்ல. காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது தமிழர்களுடைய பண்பாட்டு உரிமை. இதை புரிந்து முதல்வர் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அர்ஜூன் சம்பத் மறியல்
பிரேத பரிசோதனைக்குப் பின் பூர்ணசந்திரனின் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்து அமரர் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பார்வர்டு பிளாக் கட்சியின் முருகன்ஜி உட்பட பலரும், அமரர் வாகனத்தின் முன் அமர்ந்து மறியல் செய்தனர். 'திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதிக்க வேண்டும்; அதுவரை உடலை எடுக்கக்கூடாது' என கோஷமிட்டனர். 'மறியல் வேண்டாம்; உடலை எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்' என, பூர்ணசந்திரன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதை அடுத்து, மறியலில் ஈடுபட்டோர் விலகிக் கொள்ள, பூர்ணசந்திரன் உடல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

