சீனாவில் பரவுகிறது புதிய வைரஸ் அச்சப்பட வேண்டாம் என்கிறது அரசு
சீனாவில் பரவுகிறது புதிய வைரஸ் அச்சப்பட வேண்டாம் என்கிறது அரசு
ADDED : ஜன 05, 2025 12:22 AM
சென்னை:''சீனா வைரஸ் பாதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கை இல்லாததால், மக்கள் அச்சப்பட வேண்டாம்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார்.
சீனாவில், 2019ல் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டிப் போட்டது. கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
ஐந்தாண்டுகளுக்குப் பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. 'ஹியூமன் மெடாநிமோ வைரஸ்' என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகிறது.
இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள், மருத்துவமனையில் குவிந்து வரும் வீடியோ வெளியாகி, உலக மக்களிடையே அச்சத்தை ஏற்பத்தி உள்ளது.
காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறிகளாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அறிகுறிகளுடன், தமிழக மக்களும் பாதிக்கப்பட்டு வருவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், 'சீனாவின் வைரஸ் காய்ச்சல் குறித்து, எவ்வித எச்சரிக்கையும் இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
சீனாவில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பாக, அந்நாட்டு அரசு இதுவரை முழுமையான அறிக்கையை அளிக்கவில்லை. அது, வழக்கமான பருவகால காய்ச்சல் பாதிப்பாகவும் இருக்கலாம்.
அந்நாட்டு காய்ச்சல் குறித்து உலக சுகாதார நிறுவனமோ, மத்திய சுகாதாரத் துறையோ, எவ்வித எச்சரிக்கையையும், அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால், சீன காய்ச்சல் தொடர்பாக, மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டாம். பொது மக்களும் காய்ச்சல் பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்.
தமிழகத்தில் வழக்கமான பருவகால காய்ச்சல் பாதிப்புதான் உள்ளது. இவற்றிற்கான மருந்து, மாத்திரைகள் போதியஅளவில் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.