ADDED : செப் 07, 2025 01:20 AM

சென்னை:கவிஞரும் பாடலா சிரியருமான பூவை.செங்குட்டுவன், 94; வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்கடி கிராமத்தில், முருகவேல்காந்தி எனும் இயற்பெயருடன் வளர்ந்த இவர், 'சேரன் செங்குட்டுவன்' நாடகத்தைப் பார்த்து, தன் பெயரை செங்குட்டுவன் என மாற்றி, அதற்கு முன் தன் ஊரின் பெயரை சேர்த்துக் கொண்டார்.
திரைப்படங்களில், 1,000க்கும் மேற்பட்ட பாடல்கள், 4,000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியவர். எம்.ஜி.ஆர்., படத்துக்காக, 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊரறிந்த உண்மை' உள்ளிட்ட பாடல்களை எழுதியவர். அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு, பல அரசியல் பாடல்களையும் எழுதிஉள்ளார்.
அந்த வகையில், நான்கு முதல்வர்களுக்காக பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய, 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், தாயிற்சிறந்த கோவிலுமில்லை, ஏடு தந்தானடி தில்லையிலே, இறைவன் ப டைத்த உலகை எல்லாம்' உள்ளிட்ட பாடல்கள் பிரபலமானவை.
தமிழக அரசின், 'கலைமாமணி' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் எழுதிய, 'வாழ்க்கை என்பது நேர்க்கோடு' என்ற நுால், சென்னையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இவருக்கு, பூவை தயா, ரவி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவரின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை, சென்னை பெரம்பூரில் நடந்தன.