'ஆந்திர பெண்ணை பலாத்காரம் செய்த போலீசாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'
'ஆந்திர பெண்ணை பலாத்காரம் செய்த போலீசாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'
ADDED : அக் 02, 2025 01:40 AM

சென்னை: 'திருவண்ணாமலை பகுதியில், ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீசாரை, நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்பு பகுதியில், கிழக்கு காவல் நிலைய காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது கண்டனத்துக்குரியது. குற்றத்தை தடுத்து மக்களை காக்க வேண்டிய காவலர்களே, அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம். தங்கள் வாழ்வாதாரத்திற்காக, தமிழ் மண்ணிற்கு வந்த அண்டை மாநில இளம் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட இக்கொடுமை, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள இழுக்கு. தமிழினத்திற்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள இக்கொடுஞ்செயலை ஒரு போதும் மன்னிக்க முடியாது.
குற்றத்தில் ஈடுபட்ட காவலர்களை, பணியிடை நீக்கம் செய்வது தண்டனையாகி விடாது. அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து, நேர்மையான நீதி விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.