த.வெ.க.,வை பார்த்து ஆளுங்கட்சி நடுங்குகிறது: விஜய் காட்டம்
த.வெ.க.,வை பார்த்து ஆளுங்கட்சி நடுங்குகிறது: விஜய் காட்டம்
ADDED : செப் 10, 2025 05:11 AM

சென்னை : 'த.வெ.க.,வின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே, ஆளுங்கட்சி அஞ்சி நடுங்குகிறது' என, அக்கட்சி தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
த.வெ.க., மீது மக்களிடையே ஆதரவும், அன்பும் பெருகி வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க., அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில், பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
தற்போதைய ஆளுங்கட்சி, யாருக்கு பயப்படுகிறதோ இல்லையோ; த.வெ.க.,வை கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது. தேர்தல் பிரசார பயணம் என்பது, அனைத்து கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகபூர்வமான பிரதான நடவடிக்கைதான்.
மற்ற கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்த அரசு, த.வெ.க.,வின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால், ஆட்சியாளர்கள் தங்களின் துாக்கத்தை இழந்து, முழு நேரமும் த.வெ.க.,வை வீழ்த்துவதை பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து, கட்சியின் செயல்பாட்டை முடக்க நினைக்கின்றனர்.
அதன் ஒருபகுதிதான், திருச்சியில் த.வெ.க.,வினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. தி.மு.க., அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிக்கிறேன். த.வெ.க.,வினர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.