முதியவரிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு:ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
முதியவரிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு:ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ADDED : மார் 05, 2024 07:12 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் முதியவரிடம் 10 ஆயிரம் ரூபாய் திருடியவரை ஒரு மணி நேரத்தில் கைதுசெய்து பணத்தை மீட்டு வழங்கிய போலீசார்.நயினார்கோவில் பகுதியில் உள்ள இல்லிமுள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் 80, இவரது மனைவி செல்லம்மாள் 72, இவர்களது மருமகள் நித்யா பெயில் ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள தாய்கோ பாங்கில் நகைககளை அடகு வைத்துள்ளனர். இதற்கு வட்டி கட்டுவதற்காக 10 ஆயிரம் ரூபாயுடன் ராமநாதபுரம் வந்த சுந்தரம், செல்லம்மாள் தம்பதியர் வண்டிக்கார தெருவில் வரும் போது சுந்தரம் வயிற்று வலி காரணமாக வரும் வழியில் சாலையோரத்தில் அமர்ந்துவிட்டார். செல்லம்மாள் கணவரை விட்டு, விட்டு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.
வயிற்று வலியால் துடித்த முதியவர் சுந்தரத்திடம் வெளிப்பட்டினம் பகுதியை சேர்ந்த நுார்தீன் 60, விசாரித்து மருத்து தேய்த்து விடுவதாக வயிற்றில் தடவிக்கொடுத்தவர் முதியவர் இடுப்பில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுவிட்டார். மனைவி செல்லம்மாள் வந்தவுடன் பணத்தை பார்த்த சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் தன்னிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதை தெரிவித்தார். உடனடியாக ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பணம் திருடிய நுார்தீனை கைது செய்து 10 ஆயிரம் ரூபாயை மீட்டு முதியவர் சுந்தரத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.

