'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது தேனி'
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது தேனி'
ADDED : அக் 20, 2025 07:17 AM

சென்னை: 'தி.மு.க., அரசின் அலட்சியத்தால், தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், வெள்ளத்தில் சிக்கி அவதியுறுவதை கண்டு, நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர் மழையால், வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது, தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர்.
பருவமழை துவங்கும் முன், கால்வாய்களைத் துார்வாரி, நீர்நிலைகளைப் பேணி இருந்தால், இந்த பேரிடர் ஏற்பட்டிருக்காது. மழையை முன்கூட்டியே கணித்து, உரிய முன்னேற்பாடு செய்து மக்களை எச்சரித்து இருந்தால், இதுபோன்ற சேதம் ஏற்பட்டிருக்குமா?
முல்லைப் பெரியாறு அணையில், 1,000 கனஅடி நீர் மட்டுமே திறந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென, 7,163 கனஅடி நீர் திறந்து விடப்பட்டதுதான் வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகம் எழுகிறது.
தி.மு.க., அரசின் அலட்சியத்தால், நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்கள் சேதமாகியும், வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கின்றனர். இப்போதும் மீட்பு பணியை துரிதப்படுத்தாமல், அரசு மெத்தனமாக இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் உடனே தேனி சென்று, போர்க்கால அடிப்படையில், வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.