மனசாட்சியை விற்று விட்டு பேசுகிறார்கள்; பா.ம.க.,வுக்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலடி
மனசாட்சியை விற்று விட்டு பேசுகிறார்கள்; பா.ம.க.,வுக்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலடி
ADDED : டிச 23, 2024 10:21 AM

சேலம்: 'விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குறோம். நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறுபவர்கள், மனசாட்சியை விற்று விட்டு பேசுகிறார்கள்', என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சேலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் சேவையைத் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் தி.மு.க., அரசு செய்யவில்லை என்று பா.ம.க., குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: அதை சொல்லாவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. நீங்களே பாருங்க. எங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எங்களை பாராட்டுவார்கள். நேரடியாக அவர்களுக்கு தெரிகிறது. தமிழக அரசின் பலன்கள் புரிகிறது. விவசாயிகளாக இருப்பதால், அவர்களுக்கு தெரிகிறது.
நான் புள்ளி விபரத்தோடு சொல்லிட்டேன். ஏனெனில் இது கணக்கு வழக்கு. இதற்கென ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் சட்டசபையில், அமைச்சராக இருக்கும் நாங்கள், பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு பணம் என்பதை படிக்கிறோம். ஆடிட் ஜெனரல் ஆண்டாண்டுக்கு கணக்கு வழக்கு பார்க்கிறார்கள். அதனால், நாங்கள் வாயால வடை சுட முடியாது.
இதன் காரணமாக நிதி ஒதுக்குறோம். நிதி ஒதுக்கப்படவில்லை என்றால், மனசாட்சியை விற்று விட்டு பேசுகிறார்கள். மனசாட்சி இருந்தால், இந்த அரசை பாராட்டுவார்கள், எனக் கூறினார்.

