ADDED : டிச 30, 2024 11:57 PM

சென்னை : 'அரசின் ஜனநாயக விரோத கைது நடவடிக்கைகளை, மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, த.வெ.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சென்னை, அண்ணா பல்கலை மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில், தமிழக தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. கடிதத்தின் நகல்களை தமிழகம் முழுதும் பொதுமக்களிடமும், பெண்களிடமும், த.வெ.க., மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
சென்னையில் பொது மக்களிடம் நகல்களை வழங்கிய தொண்டர்களை தடுத்து காவல் துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை வினியோகம் செய்ய முயன்றதற்காக கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல், அற வழியில் மக்களை சந்தித்த தொண்டர்களை கைது செய்வது தான் ஜனநாயகமா?
இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை, மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.