சவால்களுக்கு தீர்வு காண்பவர்களே வெற்றி பெறுகின்றனர்: 'கவின்கேர்' தலைவர் பேச்சு
சவால்களுக்கு தீர்வு காண்பவர்களே வெற்றி பெறுகின்றனர்: 'கவின்கேர்' தலைவர் பேச்சு
ADDED : ஜன 28, 2026 06:15 PM

வேலூர்: வாழ்க்கையிலும், தொழிலிலும் சவால்களுக்கு தீர்வு காண்பவர்களே வெற்றி பெறுகின்றனர் என 'கவின்கேர்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் பேசினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் 31வது ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் பேசியதாவது:
வாழ்க்கையிலும் தொழிலிலும் சவால்கள் வருவது இயல்பானது தான். ஆனால் இதை எதிர்கொள்ளும் விதமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. சவால்களில் இருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக தீவிரமாக இறங்கி தீர்வு காண்பவர்களே வெற்றி பெறுகின்றனர். பின்வாங்கியவர்கள் மேலும் பின்னடவை சந்திக்கின்றனர்.
ஏ.ஐ
சிக்கல்களை தீர்ப்பது மட்டுமின்றி, வாய்ப்புகளை அடையாளம் காண்பது முக்கியமாகும். தொழிலில் செயல்முறை சார்ந்த அமைப்பாக மாற்றினால் வெற்றி பெறலாம். நான் கடந்த 18 மாதங்களாக தீவிரமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறேன். ஏ.ஐ தவறுகள் செய்யும். அதை சவால் செய்து வாதிட வேண்டும். பேச்சு மூலம் ஏ.ஐ உடன் உரையாடும் போது கவனம் அதிகரிக்கிறது.
எங்கள் நிறுவனத்தில் அனைத்து கொள்முதல் ஆர்டரும் ஏ.ஐ அங்கீகாரம் இல்லாமல் செல்லாது. ஏ.ஐ மிகப்பெரிய மதிப்பைச் சேர்க்கிறது. சிக்கல்களைத் தீர்ப்பது, வாய்ப்புகளை உருவாக்குவது, செயல்முறைகளை உருவாக்குவது, ஏ.ஐ-யைப் பயன்படுத்துவது, மதிப்புகளைப் பேணுவது ஆகியவை வெற்றிக்கான அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். இங்கு சாதி, மதம், மொழி, மாநிலம் போன்றவை பார்ப்பதில்லை. உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிட விரும்புகிறோம். நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களிப்பை விரும்புகிறோம்.
மருத்துவப் படிப்புகளை பொறுத்தவரை மாநில அரசு, மத்திய அரசு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேசிய மருத்துவ கவுன்சில் என அனைவரின் தலையீடு உள்ளது. இறுதியில் காலி இடங்கள் ஏற்படுகின்றன. இதேநிலை தான் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி-களிலும் உள்ளது. இந்தநிலை மாற வேண்டும். எனவே, முன்னாள் மாணவர்கள் எங்கிருந்தாலும் சமூகத்தை வழிநடத்த வேண்டும்.இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார பலமிக்க நாடாக மாறி உள்ளது.
கல்வியும் சுகாதாரமும் அரசு கவனிக்க வேண்டிய முக்கிய துறைகளாகும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் குறைவாகவே செலவிடுகின்றன. அதனால் இந்தியாவில் உயர்கல்வி பெரும்பாலும் பெற்றோர்களை சார்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி, கார்ப்பரேட் வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர், சமூக மேம்பாடு, இளம் முன்னாள் மாணவர் சாதனையாளர், வேந்தரின் சிறந்த விருதுகள் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

