ஆன்லைன் வேலை எனக்கூறி ரூ.52 லட்சம் மோசடி; கர்நாடகாவைச் சேர்ந்த மூவர் மதுரையில் கைது
ஆன்லைன் வேலை எனக்கூறி ரூ.52 லட்சம் மோசடி; கர்நாடகாவைச் சேர்ந்த மூவர் மதுரையில் கைது
ADDED : பிப் 19, 2025 04:03 AM

மதுரை : ஆன்லைனில் 'டாஸ்க்' கொடுத்து ஐ.டி., ஊழியரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த மூவரை மதுரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சிலைமானைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஒருவருக்கு டெலிகிராமில் ஆன்லைன் வேலை வாய்ப்பு குறித்து மெசேஜ் வந்தது. அதில் இருந்த 'லிங்க்' மூலம் தொடர்பு கொண்டபோது 'சில 'டாஸ்க்' கொடுப்போம். அதை செய்தால் உடனுக்குடன் பணம் வழங்கப்படும்' என்றனர்.
இதை நம்பி அவர்கள் கொடுத்த சில 'டாஸ்க்குகளை' ஐ.டி., ஊழியர் செய்து முடிக்க, அவரது வங்கி கணக்குக்கு சில ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
அடுத்தடுத்து 'டாஸ்க்' முடித்தால் கூடுதலாக பணம் கிடைக்கும் என 'மூளைச்சலவை' செய்தனர். 'அடுத்தடுத்து 'டாஸ்க்கில்' வெற்றி பெற லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.
வெற்றி பெற்றால் கூடுதலாக திருப்பி தரப்படும்' என்றனர். இதை நம்பி ரூ.52.66 லட்சம் செலுத்தி ஐ.டி., ஊழியர் ஏமாந்தார். இதுகுறித்து மதுரை எஸ்.பி., அரவிந்திடம் புகார் செய்தார்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார், மோசடி நபர்களுக்கு ஐ.டி., ஊழியர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கினர்.
மோசடி தொடர்பாக கேரளா காயம்குளத்தை சேர்ந்த அன்வர்ஷா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல்படி கூட்டாளிகள் மைசூரு உதயகிரி சல்மான்கான் 30, ஜூபர் உலகான் 23, கிரிஷ் 25, ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
வடமாநிலங்களில் ஏதாவது ஒரு கிராமத்தில் வசிப்பவரின் வங்கி கணக்கிற்கு மோசடி பணம் அனுப்பப்பட்டுள்ளது.
பணத்தை இவர்கள் பெற்றுக்கொண்டு ரூ.ஒரு லட்சத்திற்கு ரூ.8 ஆயிரம் கமிஷனை கணக்குதாரர்களுக்கு கொடுத்துள்ளனர். இதற்கு 'மூளையாக' செயல்படுவோர் குழுவாக உள்ளார்களா, தனி நபரா என கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.