அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜன 16, 2024 06:51 AM
வால்பாறை : வால்பாறை அருகே ரோடு சீரமைக்கும் பணி துவங்கப்படவுள்ளதால் கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல இன்று முதல் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக -- கேரள எல்லைப்பகுதியில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும் அதிகளவில் செல்கின்றனர்.
இந்நிலையில் அதிரபள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள புகையிலை பாறை ரோடு சீரமைக்கும் பணி இன்று முதல் துவங்கவுள்ளதால் வால்பாறை - சாலக்குடி ரோட்டில் வாகனங்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் இருமாநில மக்கள் சுற்றுலா பயணியர் கவலையடைந்துள்ளனர்.
கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் 'வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் புகையிலைப்பாறை என்ற பகுதியில் ரோடு சீரமைக்கும் பணி நடப்பதால் 16ம்தேதி முதல் வரும் 23ம் தேதி வரை எட்டு நாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
'இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்ற எந்த வாகனமும் ரோடு பணி நிறைவடையும் வரை செல்ல அனுமதி இல்லை' என்றனர்.