ADDED : ஜூலை 11, 2026 02:18 AM

சென்னை: 'டாஸ்மாக்' நிறுவனத்தில் இரு பொது மேலாளர்கள், ஐந்து மண்டல முதுநிலை மேலாளர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்கிறது. இந்நிறுவனம், மேலாண் இயக்குநரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் செயல் படுகிறது.
இது தவிர, நிர்வாகம் மற்றும் மொத்த கொள்முதல் பிரிவு பொது மேலாளர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் பதவியிடங்கள் உள்ளன.
இந்த பதவிகளுக்கும், சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய, ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு முது நிலை மேலாளர் பதவிகளுக்கும், மாவட்ட வருவாய் அலுவலர்களை, தமிழக அரசு நியமிக்கிறது. மேலாண் இயக்குநருக்கு அடுத்து, ஏழு பதவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்நிலையில், டாஸ்மாக்கில் இரண்டு பொது மேலாளர்கள், ஐந்து முதுநிலை மண்டல மேலாளர்களை இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை அரசு நேற்று முன்தினம் நியமித்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'ஏழு அதிகாரிகளும் ஓராண்டுக்கு மேலாக, ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். ஆட்சி மாற்றத்தை அடுத்து, அவர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.
