ADDED : மார் 21, 2025 12:28 AM

சென்னை: பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து பணியாளர்கள், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக போக்குவரத்து துறையில், பணியாளர் பற்றாக்குறை உள்ள நிலையில், பதவி உயர்வு, விருப்ப மாறுதல் உள்ளிட்டவை வழங்காதது, பணியாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில், போக்குவரத்து பணியாளர்கள் நேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, 'கவுன்சிலிங்' அடிப்படையில் இடமாறுதல், காலியிடங்களை நிரப்பும் வகையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பணியாளர்கள் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், சில நிர்வாகிகளுடன் ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு பேச்சு நடத்தினார்.
கோரிக்கைகளை பரிசீலிப்பதாக, அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.