ADDED : ஏப் 23, 2025 01:13 AM

சென்னை:''ரேஷன் கடைகள் முன், நிழல் தரும் மரங்களை வளர்க்கவும், நிரந்தர கூரைகள் அமைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
பா.ம.க., - வெங்கடேஸ்வரன்: விவசாயிகள் நலன் கருதி, தர்மபுரி மையப்பகுதியில், நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும். பென்னாகரம், தர்மபுரி, அரூரில் கொள்முதல் செய்வது போல, தர்மபுரி நகரத்திலும் கேழ்வரகு கொள்முதல் செய்ய வேண்டும்.
தர்மபுரியில், 95 அரிசி ஆலைகள் உள்ளன. அதை நம்பி, 500 லாரிகள், 5,000 தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, அரிசி ஆலைகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு மழை, வெயில் பார்க்காமல், பொருட்கள் வாங்க பெண்கள் செல்கின்றனர். எனவே, ரேஷன் கடைகளின் முன், நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மேற்கூரை அமைத்து தரவேண்டும்.
அமைச்சர் சக்கரபாணி: தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் நரிப்பள்ளியில் மார்ச் மாதம் முதல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தர்மபுரியில் தான் மாநிலத்திலேயே அதிக அரிசி ஆலைகள் உள்ளன.
கடந்த ஆண்டு தமிழகத்தில், 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு, 32 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் பருவம் ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. எனவே, தர்மபுரியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கூடுதல் நெல் அனுப்பப்படும். கூட்டுறவுத்துறை அமைச்சருடன் பேசி, ரேஷன் கடைகளின் முன், மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிரந்தர தகடுகளுடன் கூடிய கூரை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

