மீன்பிடி துறைமுகம் அமைக்க தீர்ப்பாயம் நிபந்தனை விதிப்பு
மீன்பிடி துறைமுகம் அமைக்க தீர்ப்பாயம் நிபந்தனை விதிப்பு
ADDED : ஏப் 25, 2025 01:17 AM

சென்னை:''மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளம், துாண்டில் வளைவு, நேர்கல் சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகளை, மீனவ கிராமங்களில் மேற்கொள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
தி.மு.க., - பன்னீர்செல்வம்: சீர்காழி தொகுதியில், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, சாவடிக்குப்பம் ஆகிய மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையில், மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். மீன்பிடி துறைமுகம் அமைக்க முடியாவிட்டாலும், துாண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும்.
இப்பகுதிகளில் மீன் உலர்களம், வலைபின்னும் கூடம், ஏலக்கூடம், 'ஐஸ் பிளான்ட்' ஆகியவை அமைக்க, கடந்தாண்டு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசு நிதி வழங்காததால், 'டெண்டர்' இறுதி செய்யப்படவில்லை.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளம், துாண்டில் வளைவு, நேர்கல் சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகளை, மீனவ கிராமங்களில் மேற்கொள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
மத்திய அரசும், இத்திட்டத்திற்கு நிதியை வழங்காமல் உள்ளது.
இவ்வாறு பல்வேறு சவால்கள் இருப்பதால், மீனவ மக்களை பாதுகாக்கும் நோக்குடன், 5 கோடி ரூபாய் சுழல் நிதி ஒதுக்கப்பட்டு, மீனவ கிராமங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விவாதம் நடந்தது.